சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 20ம் தேதி போலியோ சொட்டு மருந்து
கொடுப்பதற்காக 40000 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு
அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டிருப்பதாவது:
பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று
நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு
நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில்
மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து
கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு
விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய
உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார்
மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கை வாழ் அகதிகள்
மற்றும் இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ
சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாற்பதாயிரம் மையங்கள்
தமிழ் நாட்டில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள்
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள்,
பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு
மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
செயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 20-1-2013
(ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் 24-2-2013 (ஞாயிற்றுக்கிழமை)
இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
ரயில் நிலையங்களில் ஏற்பாடு
பல்ஸ் போலியோ நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து
நிலையங்கள
ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1013 நகரும் மையங்கள்
நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 771
நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத
பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
20-01-2013 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும்
மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல்
மற்றும் அரிமா சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் இந்த பணியில்
ஈடுபடுகிறார்கள்.
போலியோ இல்லை
போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ் நாடு 9-வது
வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ்
பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து
தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment