புதுடெல்லி:நூற்றாண்டுகள் பழமையான
மஸ்ஜிதும், முஸ்லிம் வீடுகளும் டெல்லி வளர்ச்சி ஆணையத்தால்(டி.டி.ஏ)
இடித்து தள்ளப்பட்டுள்ளன. தெற்கு டெல்லியில் மெஹ்ரோலியில் கோஸியா
மஸ்ஜிதும், சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளும், கப்றுகளும் ஆக்கிரமிப்பு
என்ற பெயரால் இம்மாதம் 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் டி.டி.ஏ அதிகாரிகள்
போலீஸ் பாதுகாப்புடன் புல்டோஸர் மூலம் இடித்து தள்ளியுள்ளனர்.
கூலி வேலைச் செய்யும் முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக வாழும் கோஸியா காலனியில் 500க்கும் அதிகமான வீடுகளை
டி.டி.ஏ இடித்து தள்ளியுள்ளது. இரண்டு கப்றுஸ்தான்களும், கட்டிடங்களின்
இடிபாடுகளில் மூடப்பட்டுள்ளது. 100க்கும் அதிகமான கப்றுகள்(மண்ணறைகள்)
தகர்க்கப்பட்டுள்ளன.
டெல்லியில் கடுமையான பனிக்காலம் துவங்க
இன்னும் சில தினங்களே மீதமுள்ள நிலையில் கைக்குழந்தைகளும்,பெண்களும்,
வயோதிகர்களும் அடங்கிய 1000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் வீதியில்
தங்கியுள்ளனர். எதிர்த்து கேட்டவர்களை போலீஸ் லத்திசார்ஜ் செய்து
விரட்டியுள்ளது. போலீஸ் வன்முறையில் முஹம்மது யூசுஃப் என்ற இளைஞரின் கை
ஒடிந்துள்ளது. நோட்டீஸ் கூட அளிக்காமல் அப்புறப்படுத்தியுள்ளனர் என்று
மஸ்ஜித் இமாம், அஸ்மத் அலி நஈமி கூறுகிறார்.
காலனியில் தகர்க்கப்பட்ட மஸ்ஜிதுடன் ஆஸம்
தக்கியஷா மஸ்ஜித், ஸோன்பூர்ஜ் மஸ்ஜித், பங்கேவாலி மஸ்ஜித், ஃபிர்தவ்ஸி
மஸ்ஜித் ஆகிய நான்கு மஸ்ஜிதுகளும் உள்ளன. இவையும் சட்டவிரோதமாக
கட்டப்பட்டது என்றும், அவற்றையும் இடிப்போம் என்றும் டி.டி.ஏ
மிரட்டியுள்ளது. இங்கிருந்த நூரி மஸ்ஜித் முன்னர் சட்டவிரோதமாக
கட்டப்பட்டது என்று கூறி டி.டி.ஏ இடித்துள்ளது.
முகலாயர்களின் ஆட்சிக்கு முன்பு இந்தியாவை
ஆண்ட லோடி வம்சத்தினரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதுதான் கெளஸியா
மஸ்ஜிதும், அதன் சுற்றுவட்டார கட்டிடங்களும் என்று டெல்லி மாநகராட்சியும்,
டெல்லி சுற்றுலா கார்ப்பரேசனும் கோஸியா காலனியின் நுழைவு வாயிலில்
நிறுவியுள்ள போர்டில் பதிவுச் செய்துள்ளது. கட்டிடங்கள் இடிக்கும் வேளையில்
இந்த போர்டும்
சேதமடைந்துள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்ற டி.டி.ஏ அதிகாரிகளின் கூற்று பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் போர்ட் தற்போது அங்கு உள்ளது. ஆனால், இவை வக்ஃப் போர்டிற்கு சொந்தமானவை என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். வக்ஃப் போர்டிற்கு வாடகை தொகை அளித்ததற்கான ரஷீதுகள் அப்பகுதி மக்களிடம் உள்ளன.
1947-ஆம் ஆண்டு முதல் இங்கு வசித்து வரும்
97 வயதான புந்துகானும், அவரது மனைவி ஹஃபீஸத்தும் கடந்த மாதங்களில் வக்ஃப்
போர்டிற்கு அளித்த வாடகை தொகைக்கான ரஷீதுகளை காண்பித்தனர். மஸ்ஜித்
இடிக்கப்பட்ட செய்தியை முக்கிய ஊடகங்கள் மறைத்துவிட்டன. மஸ்ஜிதின் சுவர்
இடிக்கப்பட்டது என்று கூறி டெல்லி சட்டப்பேரவையில் பிரச்சனை எழுப்பப்பட்டு
விவாதிக்கப்பட்டது.
சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ள பகுதி வக்ஃப்
போர்டிற்கு சொந்தமானது என்றும், 25 ஆண்டுகளுக்கு முன்பு டி.டி.ஏ
கையகப்படுத்தியது என்று விசித்திரமான விளக்கத்தை கூறுகிறார் வக்ஃப் போர்ட்
தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏயுமான மொய்தீன் அஹ்மத். மஸ்ஜிதை
இடிக்க கூடாது என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறியபொழுதும் அதனை டி.டி.ஏ
அதிகாரிகள் செவியேற்காமல் மஸ்ஜிதின் சுவரை இடித்தது துரதிர்ஷ்டவசமானது
என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் யோகானந்தா சாஸ்திரி தெரிவித்தார். தான்
முதல்வருடன் இதுக் குறித்து பேசியுள்ளதாகவும், மஸ்ஜிதை மீண்டும் கட்ட அவர்
உறுதியளித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். ஆனால், நேற்றும் கூட
கட்டிட சிதிலங்கள் லாரிகள் மூலம் மாற்றப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment